நூடுல்ஸ்

பொதுவாக நடிகராக அஜித் என்பவரை எனக்கு பிடிக்காது, ஆனால் அந்த மனுஷனின் உள்ளதை உள்ளபடி பேசும் குணம் பிடித்திருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு ஏற்ற வகையில் மாறி மாறி ஜால்ரா போடும் நடிகர்களுக்கு மத்தியில் அல்டிமேட் ஸ்டார் ஒரு வித்தியாசமான மனிதர், ஆனானப்பட்ட ரஜனியே ஜெயலலிதாவை பற்றி இவங்க ஆட்சி தொடர்ந்தால் இனி தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என கூறிவிட்டு கலைஞருக்கு அடுத்து ஜெயலலிதா முதல்வரானதும் ஜெயல்லிதாவின் துணிச்சலை கண்டு வியப்பதாக அவர் முன்னாலே மேடையில் பேசி அந்தர் பல்டி அடித்ததை பலர் பார்த்திருப்பர்.

இன்று அரசியலுக்கு வருவேன், இல்லை வரமாட்டேன், அடுத்த சனிக்கிழமை வருவேன், இப்போதைக்கு வருவதாக இல்லை எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், என் கையில் எதுவுமேயில்லை என பேட்டி கொடுத்து பம்மாத்து காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் நடிகர்களுக்கிடையில் அஜித் வித்தியாசமான மனிதராக தெரிகிறார். ஏனென்றால் தமிழ் சினிமாவில் எது நடந்தாலும் அடுத்த்தாக கலைஞருக்கு பட்டமளிப்பு விழா அல்லது பாராட்டு விழா என அவ்வளவு பேரும் கலைஞரை பற்றி மேடையில் ஜால்ரா அடிப்பதை போலில்லாமல் மனதில் பட்டதை கூறியிருக்கிறார். இதனால் அஜித்துக்கு ஒரு ரசிகன் கூடியிருக்கிறான் (நான் என்னை சொன்னேன்)

ஓரு சின்ன சந்தேகம் – இவ்வளவு பேர் தன்னை புகழுவதை எப்படி இந்த மனுஷன் தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கிறதோ?

இன்னொரு சின்ன சந்தேகம் – சினிமாவுக்கு கதை எழுதுவது, சினிமா நடிகர்களை சந்திப்பது, சினிமா விழாக்களில் கலந்து கொள்வது, பட்டம் வாங்கி சேர்த்து கொள்வது, சினிமா நடிகர்களின் சின்ன வீட்டு பிரச்சினைகளை தீர்ப்பது போன்ற வேலைகளை எல்லாம் செய்து முடித்த பின்னர் 6 கோடி பேரை ஆளுவதற்கு முதல்வருக்கு நேரமிருக்கிறதா?

------------------------------------------------------------------------------------------------------

ஞாயிற்றுக்கிழமை ரொம்ப நாளைக்கு அப்புறம் கிரிக்கட் போட்டி ஒன்றை கொஞ்சமாக பார்க்க வாய்ப்பு கிடைத்த்து, இந்திய தென்னாபிரிக்க ஒரு நாள் போட்டிகளில் பல முன்னணி வீரர்கள் இல்லாதது பரபரப்பை குறைக்கும் என நினைத்து தான் பார்த்தேன். ஆனால் எனக்கு செம திரில் போட்டி ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்த்து, ஆனாலும் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த அதிஷ்டம் தென்னாபிரிக்காவுக்கு இருக்கவில்லை எனப்படுகிறது,

1.       1.  இந்தியாவின் 50வது ஓவரில் ஆஷிஸ் நெஹ்ராவின் துடுப்பில் படாத பந்து விக்கட்டில் படுகிறது, ஆனால் அவர் ஆட்டமிழக்கவில்லை. காரணம் பெயில்ஸ் கீழே விழவில்லை மாறாக அந்த பந்து எல்லைக்காட்டை தாண்டி இந்திய அணிக்கு 4 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்கிறது.

2.       2.  49வது ஓவரில் ஆறு நான்கு ஓட்டங்களாக வாரி கொடுத்த நெஹ்ரா கடைசி பந்தை அகலபந்திற்கான எல்லையை நோக்கி வீசுகிறார், ஆனால் அது அகலப்பந்தாக அறிவிக்கபடவில்லை, கட்டாயம் இந்தியா துடுப்பெடுத்தாடியிருந்தால் அது அகலப்பந்தாக அறிவிக்கப்பட்டிருக்கும்.

3.       3. 50வது ஓவரில் லங்கவெல்ட் அடித்த பந்து எல்லைக்கோடு வரை செல்லும் போது சச்சின் கீழே விழுந்து அதை தடுக்கிறார், ஆனால் நடுவருக்கு அது 4 ஓட்டமா இல்லையா என சந்தேகம், ஆனால் இந்தியாவின் அதிர்ஷமாக அதை கிட்டிய கோணத்தில் எந்த கேமராவும் படமெடுக்கவில்லை, சந்தேகத்தின் பயனை இந்தியாவிற்கு நடுவர் வழங்கினார்.

இதில் ஏதாவது ஒரு நிகழ்வு கொஞ்சம் மாறுபட்டிருந்தால் இந்தியா ஒரு ஓட்டத்தால் வென்ற இப்போட்டியின் முடிவு மாறியுமிருக்கலாம்.

மீண்டும் ஒரு சந்தேகம் – கடைசி நேரத்தில் மைதானத்தில் பந்து தடுக்க ஷேவாக்கை காணவில்லை, ஒரு வேளை பந்தை மைதானத்திற்கு வெளியே காலால் உதைத்து அனுப்பிவிடுவார் என்னும் பயத்தில் அவரை தோனி ரெஸ்ட் ரூமிலே இருக்க சொல்லி விட்டாரோ?

------------------------------------------------------------------------------------------------------

எனது மொபிடெல் (மொபைல் ப்ரோட்பேண்ட் இணைய) இணைப்பை விட்டு வேறு இணைப்பிற்கு செல்ல்லாம் என நினைக்கிறேன், காரணம் மொபிடெல்லில் அறிமுகப்படுத்தப்படும் சலுகைகள் அனைத்தும் அரசாங்க ஊழியர்களுக்கே வழங்கப்படுகிறது. எங்களை போன்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களை அவர்கள் கணக்கில் எடுப்பதேயில்லை, இவ்வளவுக்கும் நான் மொபிடெல்லின் ஒரு பழைய வாடிக்கையாளர், ஆனால் என்னைவிட புதிதாக மொபிடெல்லில் இணையும் அரசாங்க ஊழியர்களுக்கு அதிக பயன்கள் வழங்கப்படுகிறது, இது எங்களை போன்ற பழைய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செய்யும் அநீதியாகவே பார்க்கிறேன். ஆனால் புதிதாக எந்த கனெகஷக்கு போவது என தீர்மானிக்க இயலாமலிருக்கிறேன்

------------------------------------------------------------------------------------------------------

இவ்வாரம் எங்களை விட்டு பிரிந்த இலங்கை தமிழ் கலையுலகின் பல்கலை வேந்தன் ஸ்ரீதர் பிச்சையப்பாவிற்கு எனது அஞ்சலிகள். கடைசியாக “இருக்கிறம்ஏற்பாடு செய்த அச்சுபதிவு சந்திப்பிற்கு வருகை தந்திருந்த போது அவருடன் கொஞ்சம் பேச கிடைத்த்து. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பதிவர்கள் சார்பில் வேண்டி கொள்கிறேன்.
 ------------------------------------------------------------------------------------------------------

எதிர்வரும் 27ம் திகதி எழுத்தாளர் சுஜாதா எம்மை விட்டு பிரிந்து இரண்டு வருடமாகிறது. அவர் தமிழ் எழுத்துத்துறையில் ஏற்படுத்திவிட்டு சென்ற இடைவெளி இன்னும் யாராலும் நிரப்பப்படாமலே இருக்கிறது. யாராலும் அந்த இடத்தை முழுமையாக நிரப்ப முடியும் என நினைக்கவும் முடியாது, காரணம் அவரை போல் சகல விடயங்களையும் பற்றி தெளிவாகவும் எளிமையாகவும் எழுதுபவர்கள் ரொம்பவே குறைவு. சுஜாதா பற்றி இந்த வாரம் ஒரு பதிவெழுத நினைத்திருக்கிறேன், பார்ப்போம் நேரம் கிடைத்தால் கட்டாயம் எழுத வேண்டும்.
 ------------------------------------------------------------------------------------------------------


விண்ணைத்தாண்டி வருவாயா“ ரிலீசாக போகிறதாம் எப்படியும் முதல் வாரத்திலே பார்த்துவிட வேண்டும் இந்த படத்தை நான் விரும்பி பார்க்க விருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது, அது ஆஸ்கார் விருது வென்ற பின்னர் ஏ.ஆர். ரகுமானின் இசையில் தமிழில் வெளிவரும் முதல் படம் என்பதாலாகும்.






பதிவர்களின் காதலர் தினம் - பகுதி 2

சென்ற வாரம் நான் எழுதிய (கிறுக்கிய) காதலர்களின் காதலர் தின கொண்டாட்டங்கள் பற்றிய “டணால்” அறிக்கையின் தொடர்ச்சி......


பதிவர் லோஷன்
இந்த வருட காதலர் தினத்தை பல காதலிகளோடு கொண்டாடிய பிரபல மூத்த பதிவர் லோஷன் அவர்கள் இரவு வீடு செல்ல நேரமாகியது, நேரம் சென்று வீட்டுக்கு வந்த லோஷனை அண்ணி “ஏன் லேட்?” என கேட்க , அதற்கு வெற்றி எப்.எம் இரண்டாவது வருட புர்த்தி கொண்டாட்டங்களில் நேரம் போய்விட்டதாக பொய் சொல்லி சமாளித்தாகவும் பட்சி கூறுகிறது.


கடந்த முறை 3 காதலிகளுடன் காதலர் தினத்தை கொண்டாடிய லோஷன் இம்முறை 5 காதலிகளுடன் காதலர் தினத்தை கொண்டாடியதாகவும் பட்சி சொல்லியது


பதிவர் புல்லட்
காதலர் தினத்தில் காதலி கிடைக்காத சோகத்தில் மனுஷன் கோவா படத்தை பார்த்து விட்டு நண்பரொருவருடன் முழு நாளும் கோல்பேசில் நேரத்தை போக்கியதாக தகவல். கலகல பார்ட்டியான மனுஷன் காதலி கிடைக்காத சோகத்தில் இப்போவெல்லாம் சீரியஸ் பதிவிடுவது அனைவரும் அறிந்ததே. 


மனுஷன் கோவா படம் பார்த்ததும், முன் வீட்டு நாணிப்பாட்டி புல்லட்டை காதலர்தினத்தன்று தேடியதும், நண்பரோடு பொழுதை போக்கியதும் ஒன்றுடனொன்று தொடர்பில்லாத விடயங்கள் என பட்சி கூறுகிறது.


பதிவர் வரோ
நட்சத்திர கலை விழா பதிவை சிறப்பாக எழுதி பதிவிட்டு தூங்கிய மனுஷன் காதலர் தினத்தன்று முழித்து பார்க்கும் போது கட்டிலை சுற்றி பல இளம் பெண்கள் இவருக்காக காதலர் தின அட்டைகளை நீட்டி கொண்டிருந்ததை கண்ட வரோ சந்தோஷம் தாளாமல் ஒரு பெண்ணை தெரிவு செய்து இவளை நாம் காதலியாக்கி கொள்ளுவோம் என நினைத்து அவளது காதலர் தின அட்டையை வாங்க கை நீட்டினார்.படார் என சத்தம் 


என்னவென்று பார்த்தால் இவ்வளவு நேரமும் கனவு கண்ட மனுஷன் காதலியை நோக்கி கை நீட்ட எத்தனித்ததில் கட்டிலில் தூங்கியவர் கீழே விழுந்து கால் சுளுக்கி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பதிவர் பங்குச்சந்தை அச்சு


பங்குசந்தை பற்றி எழுதும் பதிவர் காதலி தேடி இலங்கைக்கும் மலேசியாவுக்கும் பறந்து பறந்து ஒருவாறு காதலி ஒருத்தியை தேடி கண்டுபிடித்து இருவரும் தாறுமாறாக காதலிக்க தொடங்கினர். பெரிய வியாபாரியான அப்பெண்ணுக்கும் நம்ம பதிவருக்கும் இடையில் ஏதொ ஒரு நிறுவன பங்குகளை வாங்குவதில் ஏற்பட்ட முறுகலில் கடந்த ஒரு வாரமாக இருவருக்கிடையிலான பேச்சுக்கள் ரத்து.  காதலியுடன் மௌன மொழியில் கதைத்து காதலர் தினத்தை கொண்டாடிய நம்ம பதிவர் இப்போதெல்லாம் வாயில் முணு முணுக்கும் பாட்டு வரி


“நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா கவலைப்படாதே கண்ணா கவலைப்படாதே”


இப்பாடலை இவர் கன்கொனுக்கு ஆதரவாக பாடுவதாக கன்கொன் கோபி நினைத்திருக்கிறார். உண்மையில் இது அவரே அவருக்காக பாடும் பாடலாகும்.


பதிவர் ஆதிரை
படம் காட்டும் பதிவரான (பதிவுலகில் சொல்கிறேன்) இவர் காதலர் தின கொண்டாட்டத்தை வேலைத்தளத்தில் காதலிகளுடன் விமர்சையாக கொண்டாடி விட்டு கிடைத்த பரிசுப் பொருட்களை யாருக்கும் காட்டாமல் ஒளித்து வைத்துள்ளதாகவும் அந்த பரிசு பொருட்களை கொண்டு செல்ல “கன்டெயினர் ” ஒன்றை தேடுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.


பதிவர் கௌபோய் மது
மஜா பதிவர் என்றழைக்கப்படும் பதிவர் மது காதலர் தினத்தன்று மிஸ்ஸிங் இவரை பற்றி தகவல் சேகரிக்க சென்ற எமது குழுவும் மிஸ்ஸிங். 


யாராவது இவங்களை கண்டால் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க




இப்பதிவு சிரிப்பதற்கு மாத்திரமே என்பதை கூறிக்கொண்டு, இந்த மொக்கை பதிவின் இரண்டாம் பாகத்தை எழுத சொல்லி டிவிட்டிய அனுதினனுக்கு நன்றி சொல்கிறேன். இவரை பற்றி அதிகம் தெரியாததால் இவரது கொண்டாட்டம் பற்றி எழுத முடியவில்லை, அனுதினனை பற்றி நன்றாக தெரிந்த யாராவது பின்னூட்டத்தில் இவரது காதலர் தின கொண்டாட்டத்தை பற்றி எழுதவும்


நூடுல்ஸ்


கடந்த வாரம் எனக்கு  வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக எங்களுக்கு கிட்டிய இடத்தில் இருக்கும் ஒரு தனியார் வைத்தியசாலைக்கு சென்றேன், அங்கு எனக்கு ஏற்பட்டிருப்பது உணவு ஒவ்வாமையினால் (Food Poison) ஏற்பட்ட வருத்தம் என மருந்து கொடுத்தனர், ஆனாலும் வலி குறையாமையால் அடுத்த நாளும் மருந்து எடுக்க வேறு ஒரு தனியார் வைத்தியசாலைக்கு சென்றேன், அங்கு என்னை சோதித்து எனக்கு ஏற்பட்டிருப்பது தசைப்பிடிப்பு எனக்கூறி மருந்து தந்தனர். அந்த மருந்தால் தான் எனது வருத்தம் குணமாகியது.

எனது கேள்வி இப்படி எல்லாம் மருந்து கொடுக்கும் இந்த வைத்தியர்களையும், தனியார் வைத்தியசாலைகளையும் கவனிக்க யாருமில்லையா?காரணம் நான் நோயால் பட்ட வருத்தத்தைவிட பிழையான மருந்தை உட்கொண்டதால் இரண்டு நாட்கள் ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டேன். இதே நிலை சிறுவர்களுக்கு ஏற்பட்டால் என்ன நடக்கும்?????
--------------------------------------------------------------------
கூகுல் புஸ்ஸோ இல்லை பஸ்ஸோ என ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது, இதை அவர்கள் பேஸ்புக்குக்கும் டிவிட்டரும் இணைந்த ஒரு சேவையாக தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார்களாம். டிவிட்டர்க்கு போட்டியாக வந்தாலும் பேஸ்புக்கை மாற்றிட இப்போதைக்கு இயலாது என நான் நினைக்கிறேன். காரணம் பேஸ்புக்கின் விஸ்தீரணம் அதிகம்.

எனது பாடசாலை நெருங்கிய நண்பன் ஒருவன்  பள்ளி காலத்திற்கு அப்புறம் தொடர்பற்றிருந்தேன், சென்ற மாதம் பேஸ்புக்கில் அவன் என்னை பார்த்து என்னுடன் தொடர்பு கொண்டு இப்போது பிரான்சில் இருப்பதாக சொன்னான், இதே போல் பலரது பல நண்பர்களை பேஸ்புக் இணைத்துள்ளது. மேலும் எனது நண்பர்களும் உறவினர்களும் பல ஊர்களிலும், பல நாடுகளிலும் இருந்தாலும் அவர்கள் என்னைவிட்டு தூர இருப்பதாக ஒரு நாளும் எண்ணியதில்லை. இதற்கெல்லாம் காரணம் இந்த மூஞ்சி புத்தகம். இப்போதெல்லாம் நாங்கள் பேஸ்புக்கில் இடப்படும் ஸ்டேஸ் மெசேஜ், புகைப்படங்கள், வீடியோக்கள் அதே கணம் உலகிலுள்ள பலரையும் சென்றடைந்து எங்களது உணர்வுகளை பகிர செய்வதன் எங்களுடன் மிகவும் நெருங்கியமைந்து காணப்படுகிறது இந்த மூஞ்சிப்புத்தம், (இதற்கு போட்டியாகவுள்ள My Space, HI5, Friend Star என எதுவும் இலங்கையில் மூஞ்சிப்புத்தமளவுக்கு பிரபல்யமாகவில்லை).

இந்தளவு எங்களோடு உணர்வுபுர்வமாகஇணைந்துள்ள பேஸ்புக்கை கூகுலால் வெல்ல முடியாதென்றே நினைக்கிறேன். 
--------------------------------------------------------------------
சென்ற வாரம் எமது நிறுவனத்தை சகா சேர்ந்த ஒருவர் தனது காரில் இரவு நேரத்தில் தூர பிரயாணிக்கும் போது ஒரு வணக்கஸ்தலத்திற்கு அருகாமையில் காரை விட்டு இறங்கி கடவுளை வணங்கிவிட்டு உண்டியலில் ஒரு சில்லறை நாணயத்தை போட்டு காரில் ஏறும் போது ஒருவன் கத்தியை காட்டி பயமுறுத்தி காரை பறித்து கொண்டு சென்றுவிட்டான்.

காரையும் திருடனையும் அன்றிரவே பிடித்தாயிற்று. ஆனாலும் இரவு நேரங்களில் வாகனங்களில் பயணிப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும், இரவு நேரங்களில் வாகனங்களை ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் நிறுத்துவதை தவிர்த்தல் நலம்.
--------------------------------------------------------------------

அசல், தமிழ்படம் ஆகிய இரு படங்களை இந்த வாரம் பார்த்தேன், தமிழ் படம் மிகவும் சிறப்பாக இருந்த்து. ரஜனி, கமல், விஜய், விக்ரம், அஜித், சூர்யா படங்கள் முதல் அந்த கால படங்கள் வரை கலாய்த்திருக்கின்றனர். நண்பர்களோடு இணைந்து சிரித்து சிரித்து பார்க்க இந்த படம் மிக சிறந்த்து, இதை பார்த்த பின்னரும் பஞ்ச் டயலாக் பேசுவது, ஒரே பாட்டில் பணக்காரனாவது, சென்னை ரயில் நிலையத்தை அடையாளமாக காட்டுவது, விரல் வித்தை செய்வது, அறிமுக காட்சியில் சண்டை, குடும்ப பாட்டில் ஒன்று சேர்வது, பட்டங்கள் வைத்து கொள்ளுதல், வயதான நடிகர்களை நண்பர்களாக நடிக்க வைப்பது என்பவற்றை யாராவதும் செய்தால் அதை பார்த்து நாம் சிரிக்க வேண்டியதுதான்.

அசல் படம் பில்லா பாதிப்பில் அஜித் நடித்திருக்கும் இன்னொரு படம். விஜய்க்கு நடனம் எவ்வாறோ, அஜித்துக்கு நடை அவ்வாறே. தல படம் முழுதும் ஸ்லோமோஷனில் நடந்திருக்கிறார். முதல் பாதி விறுவிறுப்பாக போகும் படம் பம்பாய் வில்லனின் சாவிற்கு பிறகு ஸ்லோமோஷனில் போகிறது. இடைவேளையின் பின் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் நாம் எதிர்பார்த்த படியே நடப்பது படத்தின் மைனஸ்.
--------------------------------------------------------------------
இன்று முடிந்த இந்திய தென்னாபிரிக்க இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து, கடைசி ஓவருக்கு முந்திய ஓவரில் இந்திய வெற்றி பெற்றிருக்கிறது, ஆனாலும் தென்னாபிரிக்கா வீரர் ஹாசிம் ஹம்லா கடைசி வரை போராடியது பாராட்ட தக்கது. இதன் மூலம் இந்தியா தரப்படுத்தலில் முதலிடத்தை தக்கவைத்து கொண்டாலும், தனிப்பட்ட ரீதியில் இந்தியா இம்முதலிடத்தில் இருப்பது எனக்கு பிழை என்றே படுகிறது. இந்திய முதலிடத்தை பெற்ற போட்டியில் இரண்டு இனிங்சிலும் போமிலிருந்த டில்ஷானுக்கு கொடுக்கப்பட்ட பிழையான ஆட்டமிழப்புக்கள் காரணமாகவே இந்தியா அப்போட்டியில் வென்றது, அதே போட்டியில் சரியான ஆட்டமிழப்பு ஒன்று வழங்கப்படாத ஷேவாக் ஆடிய புயல் ஆட்டமும் இந்தியா வெல்ல ஒரு காரணமாகும்.
--------------------------------------------------------------------
கடைசியில் இவ்வாரம் பிறந்த நாள் கொண்டாடிய நம்ம பவனுக்காக அவரது காதலி (என எந்நேரமும் பிதற்றும்) எமா வெட்சனின் படம்




பதிவர்களின் காதலர் தினம் - பகுதி 1

காதலர் தின கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களை கட்ட தொடங்கியிருக்கின்றன. இலங்கையிலுள்ள நம் பதிவர்கள் இந்நிகழ்வுக்கு எப்படி தயாராகியிருக்கின்றனர் என்பது பற்றிய டணால் அறிக்கை (பகீர் அறிக்கை என பத்திரிக்கையில் வருவதால் இது டணால் அறிக்கை). தன் உயிர் பற்றி கூட சிந்திக்காது வேவு பார்த்து இக்கட்டுரையை எழுதுவது யோ 007....

பதிவர் சுபாங்கன்
”போன வருஷம் நாம ட்ரை பண்ணுன பிகர், இந்த முறை யார லவ்விட்டு இருக்கோ தெரியாது, எதுக்கும் நம்ம ஸ்பெஷல் ஹெயார் கட்டிங் செய்து யாரையாவது கவர் பண்ண பார்க்க வேண்டும்,” என பச்சை நிறத்தில் உடை தயார் செய்கிறார் கொழும்பு பல்கலைகழக காதல் மன்னன் ஐந்தறைப் பெட்டி சுபாங்கன்

 இவர் வருடம் முழுவதும் ட்ரை பண்ணிய கெம்பஸ் பிகர்களின் எண்ணிக்கை 250ஐ தாண்டுவதால் இம்முறை வேறு இடத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளார். இடம் நிச்சயமாக தெரியாததால் எங்கு சென்று இவருக்கு காதலர் தின வாழ்த்தட்டை வழங்குவது என இவரது காதலிகள் திண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

பதிவர் (இட்லி போய்) கோபி
”நம்ம லெவலுக்கு ஒரு ஐஸ்வர்யா ராய் வரும்” என இருந்த கோபிக்கு அபிஷேக் அவரை திருமணம் செய்த செய்தி சில நாட்களிற்கு முன்னரே தெரிய வந்ததால் அபிஷேக் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். வடை போனதால் கோவம் மற்றும் கவலையில் இருக்கும் கோபி ஏதாவது பெண்களின் ஹாஸ்டலை முற்றுகையிடலாம் என நம்ப தகுந்த வட்டாரங்களிடமிருந்து செய்தி வந்திருக்கிறது.

எதற்கும் கவனமாயிருங்கள் ஹாஸ்டல் பெண்களே....

பதிவர் பவன்
தனது படங்களை ரசித்து தினமும் காதல் கடிதம் எழுதும் பெண் ரசிகைகளிலிருந்து (ரசிகைகள் என்றாலே பெண்கள்தானே அப்புறம் என்ன பெண் ரசிகைகள் என யாரும் கேள்வி கேட்க கூடாது? அப்புறம் உங்களை பற்றியும் அவர் படம் போட்டுடுவார்) யாரையாவது தெரிவு செய்யும் யோசனையிலிருக்கும் இவர், திருகோணஸ்வரத்திற்கு வரும் யாரையாவது தெரிவு செய்யலாமா எனவும் யோசித்து வருகிறார்.

எதற்கும் நாம் கவனமாயிருக்க வேண்டும், மனுஷம் 15ம் திகதி எரிந்தும் எரியாமலும் வந்தாலும் வந்திடுவார்.

பதிவர் வந்தியத்தேவன்
இப்போது இங்கிலாந்திலிருக்கும் இவர் வெள்ளைக்கார பெண்களை கணக்கு செய்ய போய் சில பல உள் காயங்களுடன் வலம் வருவதாக தகவல். எனினும் எதற்கும் மனம் தளரா வந்தி அவர்கள் இங்கிலாந்தில் (தான் தனியாக மட்டும்) இருக்கையில் எடுக்கப்பட்ட படங்களை மூஞ்சிப்புத்தகத்தில் போட்டு உலகம் முழுவதும் காதலி தேடுகிறார்.

இப்போதைக்கு இவர் இங்கிலாந்து இளவரசி ஒருத்தருடன் காதல் வயப்பட்டிருப்பதாகவும், அதனால் பக்கிங்காம் அரண்மனையில் இவ்வருட காதலர் தினத்தை கொண்டாடவிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இவரது பழைய காதல் கதைகளை கேள்விப் பட்டால் மகாராணி இவருக்கு என்ன தண்டனை வழங்குவார் என இவரது பதிவுலக சகாக்கள் கவலையுடன் கலந்துரையாடி கொண்டிருக்கின்றனர்.
இங்கிலாந்தில் பதிவர் வந்தியில் 
முதுகில் வரையப்பட்டுள்ள இதயம்

மற்றைய பதிவர்களின் தகவல்கள் நாளை தொடரும்




கிரிக்கட்டோ கிரிக்கட்..... (தொடர் பதிவு)

எரிந்தும் எரியாமலும் எழுதும் பதிவெழுதும் பவனின் பதிவில் என்னையும்  இப்படி பதிவெழுத யாராவது அழையுங்கள் என பின்னூட்டினேன், மாலையில் வந்து பார்த்தால் நமக்கொரு அடிமை சிக்கிட்டான்என ஐந்தறை (மணிக்கே) பெட்டியில் பதிவழுதும் சுபாங்கனும்,  இட்டிலி போய் அல்லது கன் கொன் என பதிவெழுதும் கோபியும் என்னை இத்தொடர்பதிவை தொடர அழைத்திருக்கிறார்கள். கிரிக்கட் எப்போதுமே எனக்கு பிடித்த விளையாட்டு என்பதால் விருப்பத்துடன் இத்தொடர் பதிவை எழுதுகிறேன்.


இத்தொடர் பதிவின் விதிகள்
§  உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.

§  தற்போது கிறிக்கற் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை 

§  குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.


1.பிடித்த கிறிக்கற் வீரர்? அரவிந்த டீ சில்வா
   இவருக்கு மற்றைய முன்னணி வீரர்களை போல் போட்டிகள் கிடைக்கவில்லை, கிடைத்திருந்தால் இன்றைக்கு பேட்டிங் சாதனைகள் அனைத்தும் இவர் வசமாகியிருக்கும். நான் கண்ட மிக சிறந்த மெட்ச் வின்னர், இதற்கு சிறந்த உதாரணம் 1996 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் 3 விக்கட்டுகள், 2 கேட்சுகள்அவுட் ஆக எந்த சந்தர்ப்பத்தையும் எதிரணிக்கு வழங்காமல் பெற்ற சதம் என்பவற்றின் மூலம் இலங்கைக்கு உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்ததை கூறலாம்.

2.பிடிக்காத கிறிக்கற் வீரர்? ஹர்பஜன் சிங்
  எனது பதிவுகளை வாசித்தவர்களுக்கு, ஹர்பஜன் சிங்கை நான் எந்த அளவுக்கு வெறுக்கிறேன் என தெரியும்.

3.பிடித்த வேகப்பந்துவீச்சாளர்? வெள்ளை மின்னல் அலன் டொனால்ட், ஆகிப் ஜாவேட் மற்றும் இயன் பிஷப்.
சிறுவயதில் கிரிக்கட் விளையாடையில் இவர்களது பாணியில் பந்து வீச எவ்வளேவோ முயன்றிருக்கிறேன்.  ஆகிப் ஜாவேட் மாதிரி ஹெயார் ஸ்டைல் எல்லாம் செய்து பந்த வீசியிருக்கிறேன்.

4.பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்? ஆஷிஸ் நேரா, ஸ்ரீ சாந்த்
மைதானத்தில் மற்றைய வீரர்களுக்கு மரியாதை கொடுத்து விளையாடுவதில் இவர்களை அடித்து கொள்ள ஆளேயில்லை, அவ்வளவுக்கு கனவான் வீரர்கள்..

5.பிடித்த சுழற்பந்துவீச்சாளர்? முரளி மற்றும் வோர்ன்
கலக்கல் மன்னர்கள், என்ன செய்தாவது விக்கட்டுகளை வீழ்த்தி விடுவார்கள். பெயிலியர் ஆன சந்தர்ப்பங்கள் மிக குறைவு.

6.பிடிக்காத சுழல்ப்பந்துவீச்சார்? பிடிக்காத வீரரும் ஒரு சுழல் பந்து வீச்சாளர்தான்அவரில்லாமல் பிடிக்காத சுழல் பந்து வீச்சாளர் ஆஷ்லி ஜைல்ஸ்.
காலுக்கு பின்னால் பந்து வீசி பொறுமையை சோதிப்பதில் மன்னன்.

7.பிடித்த வலதுகைத்துடுப்பாட்டவீரர்? அரவிந்த டீ சில்வா மற்றும் ரிக்கி பொண்டிங்.
எல்லா விதமான ஷொட்களையும் மிக அழகாக அடிக்க கூடியவர்கள், அதிலும் முக்கியமாக எனது விருப்ப ஷொட்களான புல் மற்றும் ஹுக் ஷொட் அடிப்பதில் விண்ணர்கள் (வின்னர்களும் தான்)

8.பிடிக்காத வலதுகைத்துடுப்பாட்டவீரர்? அப்துல் ரசாக்
அவர் துடுப்பெடுத்தாடும் பாணி அசிங்கமாக இருப்பதால், முரளியை விட அசிங்கம் என கூறவில்லை, ஆனால் முரளியை துடுப்பாட்ட வீரராக யாரும் நினைப்பதில்லை என்பதால் எனது தெரிவு ரசாக்.

9.பிடித்த இடதுகைத்துடுப்பாட்டவீரர்சனத் ஜயசூரிய மற்றும் பிரையன் லாரா
இவங்க அடிக்க தொடங்கினால் சும்மா அதிரும். நீண்ட காலமாக பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள், மிக சிறந்த மெட்ச் வின்னர்கள்

10.பிடிக்காத இடதுகைத்துடுப்பாட்டவீரர்? கௌதம் காம்பீர்
இவர் எல்லா பந்துக்கும் நடந்து வந்து அடிக்கும் டெக்னிக் எனக்கு பிடிக்காமையினாலாகும்.

11.பிடித்த களத்தடுப்பாளர்? ஜொன்டி ரோட்ஸ் மற்றும் ரிக்கி பொண்டிங்
மின்னல் வேகத்தில் களத்தடுப்பில் ஈடுபடுவதால் இவர்களை பிடிக்கும், இலங்கை வீரர்களில் ரொஷான் மகாநாமவையும் ரொம்ப பிடிக்கும்.

12.பிடிக்காத களத்தடுப்பாளர்? நுவன் சொய்சா மற்றும் அவிஸ்க குணவர்தன
பீல்டிங்கா? அது ஒரு தின்பண்டமா என கேட்பவர்கள்

13. பிடித்த ALL-ROUNDER? குளுஸ்னர், பிளின்டொப் மற்றும் அன்ஜலோ மெத்தியுஸ்
கஷ்டமான நேரங்களில் அணிக்கு கை கொடுப்பவர்கள்

14.பிடித்த நடுவர்சைமன் டௌபல், டிக்கி பேர்ட் மற்றும் பில்லி பாடன்
வீரர்களோடு மிகவம் சுமுகமாக நடப்பவர்கள் மற்றும் இரண்டாமவர் மைதானத்தில் உள்ள ரசிகாகளை கவருவதில் மன்னர்.

15.பிடிக்காத நடுவர்? டெரல் ஹெயார் 
காரணம் துவேஷத்தை கிரிக்கட்டில் காட்டியமையினால்

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர்ரிச்சி பேனோ, பில் லாரி, டேனி மொரிசன் மற்றும் இயன் செப்பல்
எந்த அணிக்கும் சார்பாக இல்லாமல் வர்ணனை செய்வதால் இவர்களை பிடிக்கும்

16. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்ரவி சாஸ்திரி மற்றும் ரஞ்சித் பொணான்டோ
தங்கள் நாட்டு வீரர்களை மட்டும் உயர்த்தி பேசுவதில் மன்னாகள்

18.பிடித்த அணி? இலங்கை, இலங்கை மற்றும் இலங்கை
ஏன் பிடிக்க கூடாது, எங்கள் நாட்டு அணி ஆகவே பிடிக்கும்

18.பிடிக்காத அணி? இந்தியா
சச்சின் போன்ற பண்பான வீரர்களை கொண்டிருந்தாலும் எனக்கு இந்திய என்றதுமே ஹர்பஜன், ஸ்ரீசாந்த், யுவராஜ்சிங் போன்ற வீரர்கள் மற்றைய அணி வீரர்களோடு நடந்து கொள்ளும் நினைவுக்கு வருவதாலாகும்.

20.விரும்பிப்பார்க்கும் அணிகளுக்கிடையிலான போட்டி? இலங்கை விளையாடும் அனைத்து போட்டிகளையும் விரும்பி பார்ப்பேன்

21.பிடிக்காத அணிகளுக்கிடையிலான போட்டி? பிடிக்காத போட்டி என எதுவுமேயில்லை எல்லா கிரிக்கட் போட்டிகளையும் ரசிப்பேன்.

22.பிடித்த அணித்தலைவர்மார்க் டெயிலர் மற்றும் ஷேன் வோன்
இப்போதைய அவுஸ்திரேலிய அணியை பலமான அணியாக மாற்றியதில் மார்க் டெயிலருக்கு முக்கிய பங்குண்டு. ஷேன் வோன் மிக சில போட்டிகளுக்கு மட்டுமே அவுஸ்திரேலியாவுக்கு தலைமைதாங்கினார், மிக சிறந்த தலைவராக வேண்டியிருந்தவர் ஆனால் அவரது நடத்தை காரணமாக நிரந்தர தலைமைப்பதவி கிடைக்கவில்லை, அவுஸ்திரேலியா இழந்த மிக சிற தலைவர் ஷேன் வோன் ஆகும்.

23.பிடிக்காத அணித்தலைவர்? மொஹம்மட் அசாருதீன் 
காசுக்காக தாய் நாட்டை காட்டி கொடுத்தவர், ஹன்சி குரோன்யே என்ற மிக சிறந்த வீரரை சூதாட்டத்திற்கு தூண்டியதும் இவர் செய்த மிகப் பெரிய பிழை.

24.உங்களுக்கு பிடித்த போட்டிவகை?(T20, ODI, TEST)
TEST -ரசித்து சுவைக்க
ODI - அளவுச் சாப்பாடு
T20 - அவசர ருசிக்கு
மூன்றுமே பசியாற்றினால் போதும்.

25.பிடித்த ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி? சனத் ஜயசூரிய, ரொஷான் மகானாம
வேகம், விவேகம், அதிரடி, நிதானம் கலந்த ஜோடி... 

26.பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி? பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி என யாருமில்லை.

27.(உங்கள் பார்வையில்) சிறந்த டெஸ்ட் வீரர்? முரளிதரன், லாரா, சச்சின்
நீண்ட காலத்திற்கு இவர்களது சாதனைகள் இவர்களை பற்றி பேசும்.

28.கிறிக்கற் வாழ்நாள் சாதனையாளர் (உங்கள் பார்வையில்)? முரளிதரன்
எத்தனையோ சோதனைகளுக்கு மத்தியில் சாதித்து காட்டிய வீரர்

29. சிறந்த கனவான் வீரர் ? லாரா மற்றும் கோட்னி வோல்ஷ்
மைதானத்தில் கண்ணியமாக நடந்து கொள்வார்கள்

30. நான் பார்த்து வியந்த வீரர்கள்? சனத் ஜயசூரிய, ஷேவாக் மற்றும் அப்ரிடி
இவங்க தொடங்க மாட்டாங்க தொடங்கிட்டா அப்புறம் நிறுத்த மாட்டாங்க..


இத்தொடரை தொடர 
நான் அழைப்பது: கிரிக்கட் பதிவுகளுக்கு பெயர் போன 2 பிரபல பதிவர்கள்
(நான் அழைப்பவர்களுக்கு ஒரு கருத்து. என் விருப்பங்கள் உங்களின் விருப்புக்களுக்க முற்றுமுழுதாக எதிராக இருந்தாலும் தொடருங்கள். விருப்புக்கள் வேறுபட்டன. தனிப்பட்ட விருப்புக்களுக்கு நான் தலைவணங்குகிறேன், நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்)

இங்கு நான் எழுதியது முற்றிலும் எனது சொந்த கருத்தாகும் யாரையும் புண்படுத்த எழுதவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

  ரொம்ப நாளாக பதிவு எழுதும் பார்மை இழந்து இருந்த எனக்கு இத்தொடர்பதிவை எழுதியதன் பின்னர் இனி கொஞ்சம் எழுதலாம் என தோன்றியிருக்கிறது, எழுத தூண்டியமைக்கு சுபாங்கனுக்கும் கோபிக்கும் நன்றி.