நான் ரசித்த கிரிக்கட்டூன்கள்

பதிவு எழுத முடியாமல் எனது இணைய இணைப்பில் ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதனால் ஒரு பட பதிவு. நான் ரசித்து சிரித்த சில கிரிக்கட் கார்ட்டூன்கள்



















நூடுல்ஸ்

நித்தியானந்தா சாமியாரின் லீலைகள் அம்பலமாகியவுடன் பல ஊடகங்கள் கூக்குரலிட்டு போலி சாமியாரின் லீலைகள் அம்பலமாகிவிட்டன தெரிவிக்கின்றன, ஆனால் இந்த போலி சாமியார்களை உருவாக்குவதில் முக்கிய பங்கை இந்த ஊடகங்கள் வகிப்பதை மறந்துவிட்டன. குமுதம் இவரை வளர்த்திருக்காவிட்டால் இந்த நித்தியானந்தா உலகுக்கு தெரியாமல் போயிருப்பார். இலங்கையை பொருத்த வரையில் நித்தியானந்தரை விட சும்மா பகவான் எனும் இன்ஸ்ட்ண்ட் கடவுள்தான் பிரபலமாயிருக்கிறார். இவரை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் ஏதொ உலகை இரட்சிக்க வந்த உத்தமர் போல் புகழுவதை கண்டால் எரிச்சலாய் இருக்கிறது.
மக்களை வழி நடத்த சிறந்த ஆயுதமான தொழிநுட்பத்தை கொண்டுள்ள இவ்வுடகங்கள் அதை பயன்படுத்தி மக்களை நல்வழிப்படுத்தாமல் சும்மா பகவான் புகழ் பாடுவது வேதனைக்குறியது. இல்லை பணம் கிடைப்பதால்தான் சும்மா பகவானை புகழுகிறோம் என்றால் பணத்துக்காக விபச்சாரம் செய்பவர்களுக்கும் இவ்வுடகங்களுக்கும் என்ன வித்தியாசம்?

பதிவுலகில் விழிப்புணர்வு பற்றிய பதிவுகள் அதிகம் வந்தாலும் இன்னும் பதிவுலகம் இன்னும் மக்களிடம் போய் சேரவில்லை என்பதால் மக்களை விழிப்புணர்வு செய்யும் முக்கிய பணி வெகுஜன ஊடகங்களுக்கு உண்டல்லவா? இன்னும் சில பத்திரிகைகள் சாய்பாபா புகழ் பாடுகின்றன. எப்போது நம்ம தமிழர்கள் உயிருள்ள மனிதர்களை வணங்குவதை விடப்போகிறார்களோ தெரியவில்லை.

----------------------------------------------------------------------------------------------------
மேற்கிந்திய சிம்பாவே முதலாவது ஒருதினப் போட்டியில் சிம்பாபே வெற்றி பெற்றதும், சிம்பாவே (பலமான?) மேற்கிந்திய தீவுகள் அணியை ஒரு நாள் தொடரில் வென்றிடும் என நினைத்தால் அடுத்துவரும் போட்டிகளில் சிம்பாபே மண் கவ்வியது. இதே போல்தான் அவுஸ்திரேலிய நியுசிலாந்து முதல் போட்டியில் நியுசிலாந்து வென்றதும் இத்தொடரில் நியுசிலாந்து அவுஸ்திரேலியாவுக்கு நல்ல போட்டியை கொடுக்கும் என எதிர்பார்த்தால் ஒரு நாள் தொடரை அவுஸ்திரேலியா இலகுவாக வென்றது.

பாகிஸ்தான் வீரர்களுக்கு கிடைத்த தண்டனைகள் கொஞ்சம் அதிகமாக தோன்றினாலும் கிரிக்கட் என்னும் கனவான்களின் விளையாட்டை சிதைத்த வீரர்கள் அதற்குறிய தண்டனையை ஏற்று கொள்ளதான் வேண்டும், பல முன்னணி வீரர்ளை தண்டனைக்குற்படுத்திய பாகிஸ்தான் கிரிக்கட் போர்டுக்கு பாராட்டுக்கள். காரணம் ஆசியாவிலுள்ள கிரிக்கட் சபைகள் வீரர்களை முதன்மையாக கொண்டே இயங்குகையில் இவ்வீரர்கள் இல்லாவிட்டால் போட்டியில் தோற்றாலும் பரவாயில்லை என பல முன்னணி வீரர்களுக்கு தண்டனை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கட் சபை பாராட்ட தகுந்ததே
----------------------------------------------------------------------------------------------------
வேலை தேடி ஒரு முன்னணி அரசியல்வாதியிடம் சென்ற பட்டதாரி மாணவர்களை அவ் அரசியல்வாதி வேலை வேண்டுமாயின் தனது தேர்தல் வேலைகளை செய்யுமாறும் அதில் திருப்தி ஏற்பட்டால் தகுந்த வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதுதான் இலங்கையின் ஜனநாயகமா? இப்படி அரசியல் செய்வதை பார்க்க அம்மாதிரியான அரசியல்வாதிகள் பிச்சை எடுத்து சாப்பிடலாம்.
----------------------------------------------------------------------------------------------------
விண்ணைதாண்டி வருவாயா பார்த்தேன். கௌதம் தனது கதை சொல்லும் ஸ்டைலில் செதுக்கியிருக்கிறார். இசைப்புயல்தான் இப்படத்திற்கு உயிர் நாடி என்று சொலல்லாம். மிகவும் அழகாய், ஆர்ப்பாட்டமில்லாமல் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சியாகவிருந்த்து, அப்புறம் சிம்பு, மனுஷன் இந்தளவு நடிப்பு திறமையுள்ளவரா என வியந்தேன், இவ்வாறு இன்னும் 2,3 படங்கள் நடித்தால் நான் சிம்புவின் தீவிர ரசிகராகிவிடுவேன், மன்மதனுக்கு பிறகு சிம்பு நடித்த படங்களில் நான் ரசித்த்து விண்ணைதாண்டி வருவாயா மட்டுமேயாகும். நீண்ட நாட்களுக்கு பின்னர் தியேட்டரில் ரசித்து பார்த்த காதல் கதை இதுதான் என நினைக்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவுலகில் நான் வியக்கும் ஒரு நபர் கன்கொன் எனப்படும் கோபி. காரணம் சென்ற பதிவை நான் பதிவிட்டு திரட்டிகளில் இணைக்க முன்னரே அப்பதிவிற்கு வாக்கு போட்டு, பின்னூட்டம் போட்டு முடித்து விட்டார். மனுஷன் எப்படிதான் இவ்வளவு விரைவாக பின்னூட்டம் போடுறாரோ தெரியவில்லை. எனது சமீபத்திய எல்லா பதிவுகளுக்கும் முதல் பின்னூட்டம் அவரிடமிருந்துதான் வந்தாலும் கோபி மேல் எனக்கு ஒரு கோபமுண்டு. அந்த மனுஷனின் நகைச்சுவை பதிவுகளிற்கு நான் ரசிகன், ஆனால் இப்போ முன்னரை போல் நகைச்சுவை பதிவுகளை போடாத கன்கொனுக்கு எனது கண்டனங்கள்
----------------------------------------------------------------------------------------------------





ஐ.பி.எல் – மறைக்கப்பட்ட மறுபக்கம் (பாகம் 2)

இங்கிலாந்து சென்று 3 டெஸ்ட் கொண்ட தொடரை விளையாட வேண்டிய இலங்கை அணி, அங்கு சென்று விளையாட வில்லை. காரணம் முன்னணி வீரர்களான மகேல, சங்கக்கார, முரளி போன்றோர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட வேண்டும் என கூறி அத்தொடரை இரத்து செய்துவிட்டனர்.

அதிக காலம் இங்கிலாந்திற்காக விளையாடி சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிளின்டொப், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார், ஆனாலும் ஐ.பி.எல்லில் விளையாடுவாராம். 1000 டெஸ்ட் விக்கட்டுகளை பெற்று சாதனை புரிவார் என எதிர்பார்க்கப்பட்ட முரளி. இந்த வருடத்துடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போகிறாராம், ஆனால் தொடர்ந்து ஐ.பி.எல்லில் விளையாடுவாராம். இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருக்க வேண்டிய லசித் மாலிங்க கடந்த இரண்டு வருடங்கள் முழுமையாக விளையாடியது ஐ.பி.எல் தொடர்களில் மாத்திரம் தான். தனது நாட்டுக்காக விளையாடாமல் பிரெட் லீ ஐ.பி.எல. தொடரில் விளையாட விரும்புகிறார்


இவற்றை பார்க்கும் போது சர்வதேச வீரர்கள் தங்களது நாட்டுக்காக விளையாடுவதை காட்டிலும், ஐ.பி.எல்லில் விளையாடுவதை விரும்புவதாக தெரிகிறது, ஆனால் இதை ஆரோக்கியமாக எடுத்து கொள்ள முடியாது. காரணம்

1. அதிக பிரபலமல்லாத திறமையுடைய வீரர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
உதாரணமாக சங்கக்கார, மகேல, முரளி, டில்சான் போன்ற 4 அல்லது 5 பேர் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கட் அணி கொடுக்கப்போகும் விலை. அந்த அணியின் வீரரும் உலகிலுள்ள மிக சிறந்த விக்கட் காப்பாளருமான பிரசன்ன ஜயவர்தனவுக்கு இந்த காலப்பகுதியில் விளையாட போட்டிகள் கிடைக்காமல் போவதால் அவரது போர்ம் மற்றும் மனநிலை மாற்றம் காரணமாக அவரது திறமை மங்கிப் போகலாம்.


2. FTP யில் மாற்றங்களை ஏற்படுத்தால் பல நாடுகளுக்கு சர்வதேச போட்டிகள் இல்லாமல் போதல்.
சர்வதேச கிரிக்கட் அட்டவணையை மாற்றம் செய்வதால் அந்த காலப்பகுதியில் பல நாடுகளுக்கு போட்டிகள் அற்றுப்போதல். இதில் முக்கியமாக பாதிக்கப்பட போவது அதிகம் பிரபலமல்லாத அல்லது தனது ஒரு வீரரேனும் ஐ.பி. எல் தொடரில் விளையாடா சிம்பாபே, பங்களாதேஷ் போன்ற அணிகள்.

3. பந்து வீச்சாளர்கள் என்பவர்கள் ஓட்டங்களை கட்டுபடுத்துபவர்கள் மாத்திரமே என்னும் நிலை ஏற்படலாம். 
இன்னும் என்னை போன்ற பலருக்கு டெஸ்ட் போட்டிகள் பிடிக்க காரணம், அதிலுள்ள ஜீவன். திறமையுள்ளவாகள் மாத்திரமே அங்கு தொடர்ந்து சாதிக்கலாம். சச்சின் 20 வருடங்கள் டெஸ்ட் போட்டிகளில் சாதிப்பதற்கு காரணம் அவரது திறமை, ஆனால் திடீரெ னஒரு யுசுப் பதான் சச்சினை விட சிறந்த ஆட்டக்காரராக 20-20 போட்டிகளில் உருவகப்படுத்தப்படலாம், ஆனால் டெஸ்ட் போட்டி என வரும் போது யுசுப் பதானால் அவரது அதிரடியை மாத்திரம் கொண்டு சச்சின் போல் எதுவும் சாதிக்க இயலாது. காரணம் டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. 

மார்க் டெயிலர் தலைவராக இருந்த போது துடுப்பாட்ட வீரரை சுற்றி 6 பீல்டர்களை நிக்க வைத்து ஷேர்ன் வோனை பந்து வீச அழைத்து விக்கட்டுகளை கைப்பற்றியது போன்று 20-20 போட்டிகளில் ஷேன் வோர்னால் விக்கட்டுகளை பெற இயலாது காரணம் அவருக்கு பந்து தடுப்பாளர்களை விருப்பப்படி வைக்க முடியாது. அந்தளவுக்கு பந்து வீச்சாளரை கட்டுப்படுத்தி கிரிக்கட்டை துடுப்பாட்ட வீரர்களுக்கு மாத்திரமான விளையாட்டாக 20-20 போட்டிகள் மாற்றியது. 

மேலும் எந்த பந்து வீச்சாளர்களையும் எதிர்த்து அநாயாசமாக அடித்து ஆடலாம் காரணம் பீல்டிங்கில் உள்ள கட்டுபாடுகள். முரளியின் விக்கட் எடுக்கும் போர்ம் குறைந்ததற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது ஐ.பி.எல்லில் அவரை எதிர்த்து துடுப்பாட்ட வீரர்கள் அதிக ஓட்டங்களை பெற்றதையாகும்.

4. அணி உரிமையாளர்களான பணக்காரர்கள் கிரிக்கட் வீரர்களை தங்களுக்கு வேண்டிய விதத்தில் விளையாட சொல்வது.

ஷாருக்கான் சொல்படி பொன்டிங், கிறிஸ் கெயில், இஷாந் சர்மாவும், விஜய் மல்லையாவுக்கு தேவையான படி காலிஸ், பீட்டர்சன், ட்ராவிட், கும்ளே விளையாடுவதும், சங்கக்கார, மகேல, யுவராஜ் போன்றோருக்கு பிரீத்தி ஷிந்தா போன்றோர் கிரிக்கட் பயிற்றுவிப்பதும் கிரிக்கட்டுக்கு நல்ல எதிர்காலமாக எனக்கு தெரியவில்லை.

இன்னும் சில விபரங்கள் அடுத்த பகுதியில்



ஐ.பி.எல் – மறைக்கப்பட்ட மறுபக்கம் (பாகம் 1)


2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் நோக்கோடு மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற இந்திய கிரிக்கட் அணி, அப்போதைய ரேட்டிங்கில் கடைசியிடத்திலிருந்த பங்களாதேஷ் அணியிடம் தோல்வி கண்டு போட்டி தொடரிலிருந்து விலகி நாடு வந்த்தும் ரசிகர்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பில் கேட்கப்பட்ட முதல் கேள்வி, “ஏன் இவர்களை விட நன்றாக விளையாடகூடிய வீரர்கள் நாட்டில் இல்லையா”. மேலும் முன்னணி வீரர்கள் விளம்பரம் நடிக்கும் நேரமளவுக்கு கூட கிரிக்கட் பயிற்சியிலீடுபடவில்லை என்னும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.



உலக கிண்ணத்தை 1983இல் இந்தியாவுக்கு கொண்டு வந்த தலைவரான கபில்தேவ், சிறந்த பல இளம் வீர்ர்களை சர்வதேச அளவுக்கு கொண்டு வருவதாக சூளுரைத்து, அந்த காலத்தில் இந்தியாவிலுள்ள பல இளம் கிரிக்கட் வீரர்களையும், சர்வதேச வீரர்களையும் கொண்டு உருவாக்கியதுதான் ஐ.சி.எல். ஆனால் இந்திய கிரிக்கட் வீரர்கள் கடையில் உடை வாங்க சென்றாலும் அந்த நிகழ்வை விற்று காசு சம்பாதிக்கும் இந்திய கிரிக்கட் சபைக்கு கபில் தேவின் இந்த நடவடிக்கை பிடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஐ.சி.எல்லினால் இந்திய கிரிக்கட் சபைக்கு “பெரியளவில் எந்த வருமானமும் இல்லாத்தாகும். இதனால் இந்திய கிரிக்கட் சபை அந்த லீக்கில் விளையாடும் வீரர்களை தடைசெய்த்து மட்டுமல்லாது, தனது பணபலத்தை வைத்து ஐ.சி.சியை பணிய வைத்து ஐ.சி.எல்லில் விளையாடிய சர்வதேச வீரர்களை சர்வதே போட்டிகளில் இருந்து ஒதுக்கி வைத்த்து. ஆனாலும் இம்முறையை கைகொண்டு இலாபம் சம்பாதிக்கலாம் என்பதை கண்டறிந்த இந்திய கிரிக்கட் சபை தொடங்கியதுதான் ஐ.பி.எல்.



ஐ.பி.எல். தொடங்கும் போது அதற்கு சொல்லப்பட்ட காரணம் இளம் இந்திய வீரர்களது திறமையை வளர்ப்பதற்கு என்பதாகும். இதற்கு தலைவராக திறமையான வியாபாரியான லலித்மோடியை களத்தில் இறக்கியது, இதற்கு முக்கிய காரணம் லலித்மோடி கிரிக்கட் வாரியத்தில் சேர்ந்ததன் பின்னர் இந்திய கிரிக்கட் வாரியத்தின் வருவாய் 7 மடங்காக அதிகரித்த்து. தேர்ந்த வியாபாரியான லலித் மோடி இந்த கிரிக்கட் வியாபாரத்தை நன்றாக திட்டமிட்டு இலாபகரமாக மாற்றுவார் என்பதை அறிந்துதான் தலைமை பதவியை அவருக்கு வழங்கினார்கள், அவர்களை லலித் மோடியும் ஏமாற்றவில்லை

பணம் கொழிக்கும் 8 முக்கிய நகரங்களை அடிப்படையாக வைத்து 8 அணிகளை உருவாக்கி அதை ஏலம் விட்டு பெரும் வருமானத்தை பெற்றார். கிட்டத்தட்ட ஒரு அணி 67-112 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டது. அதிக பட்சமாக மும்பாய் அணி 111.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தாலும் குறைந்த பட்சமாக ராஜஸ்தான் அணி 67 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு எமர்ஜிங் மீடியா நிறுவனத்தாலும் வாங்கப்பட்டது. இவ் ஏலத்தினால் இந்திய கிரிக்கட் வாரியத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேலே வருமானம் கிடைத்துள்ளது. மேலதிகமாக 10 வருடங்களுக்கு உத்தியோக புர்வ ஊடகமாக தெரிவு செய்யப்பட்ட சோனி நிறுவனம் 1.026 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. தலைப்பில் (DLF IPL) தனது பெயரை போட்டு கொள்ள DLF  நிறுவனம் ஐந்து வருடத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. நடுவர்களின் அனுசரனையாளர்களான கிங்பிஷர் நிறுவனம் 5 வருடத்திற்கு 26 மில்லியன் அமெரிக்க டொலர்களையும்மேலும் ஹீரொ ஹொன்டா நிறுவனம் 22 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெப்சிகோலா நிறுவனம் 12 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கியுள்ளது.

இத்தனை மில்லியன் டொலர்களை இலாபமாக குவித்த இந்திய பிரிமியர் லீக்கும் இந்திய கிரிக்கட் சபையும் உலக கிரிக்கட்டுக்கு வழங்கியது என்ன வென அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்





நூடுல்ஸ்

நேற்றிரவிலிருந்தே நித்தியானந்தா பரமஹம்சர் என்ற கழிசடை சாமியாரை பற்றிய பதிவுகள், ருவிட்டுகள் இணையத்தில் அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. தனிப்பட்ட ரீதியில் சன் டீவி இதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியதற்கு ஏதாவது அரசியல் காரணங்கள் இருக்கலாம், இருக்கவும் வேண்டும். 

இந்தளவிற்கு இப்படி பட்ட ஆட்களை சிகரத்தில் ஏற்றி வைப்பதும் ஊடகங்கள்தான், அவர்களை திடீரென்று அதால பாதளத்திற்கு தள்ளி விடுவதும் இதே ஊடகங்கள்தான். இப்போது பிரச்சினை சாமியாரோ, நடிகையே அல்ல. இந்த ஜென்மங்களின் காலை தொட்டு கையை தொட்டு வணங்கும் முட்டாள் பக்தர்கள்தான். சாமியாரின் பாலியல் தேவையை தனக்கு தேவைப்பட்ட ஒருத்தருடன் தீர்த்து கொண்டது ஒரு பெரிய குற்றமல்ல, காரணம் அந்தாளும் ஒரு சாதாரண மனிதர்தானே. அப்படி இருக்கும் போது ஏன் சாதாரண மனிதர்களை வணங்குகிறார்கள் என்பதுதான் இங்கு முக்கிய கேள்வி. மற்றபடி அடுத்தவர் படுக்கையறையில் நடப்பதை தொலைகாட்சியில் காட்டுவது என்பது அநாகரீகத்தின் உச்சக்கட்டம். ஆனால் சாதாரண மனிதனான ஒருத்தனை கடவுள் ஸ்தானத்திற்கு கொண்டு சென்றது யார் பிழை? முதல் பிழை ஊடகங்கள்தான் என்பது எனது கருத்து. 

இந்த சாமியார் இவ்வளவு பிரபல்யமாவதற்கு எழுத்தூடகமான குமுதம் தனது வாசகர்களிடம் மன்னிப்பு கேட்குமா? சாதாரண ஆசா பாசம் கொண்ட மனிதனை கடவுளாக சித்தரித்துடன் மாத்திரமன்றி அவர்களுக்கு அறிவுரையும் வழங்க வழி ஏற்படுத்தி கொடுத்தற்காக தனது வாசகர்களிடம் மன்னிப்பு கேட்குமா? 

இலங்கையிலும் அம்மா பகவான் பற்றிய கட்டுரைகள் தேசிய பத்திரிகைகளில் வெளி வந்து கொண்டிருக்கிறது. இது எவ்வளவு காலத்திற்கு என தெரியாது???

விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஊடகமே போலி சாமியார்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவதா?

சாமிகளே உங்களது ஆசைகளை தீர்த்து கொள்வது பிழை என சொல்லவில்லை, தயவு செய்து மதத்தை வைத்து ஏமாற்றாதீர்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

யாராலும் எட்ட முடியாத ஒரு நாள் போட்டியொன்றில் இரட்டை சதம் பெறும் சாதனையை சச்சின் முறியடித்து ஒரு நாள் போட்டியில் 200 ஓட்டங்களை பெற்றுவிட்டார். பல கிரிக்கட் சாதனைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் சச்சின் இந்தளவிற்கு முன்னேறியதற்கு அவரது தன்னடக்கமும் ஒரு காரணம் என நினைக்கிறேன். 20 வருடங்களுக்கு மேலாக விளையாடி வரும் சச்சின் மற்றைய சமகால இந்திய வீரர்களை போல பிரச்சினைகளை சந்திக்காததும் அந்த மாபெரும் வீரரின் தன்னடக்கத்திற்கு சாட்சிகளாகும். தோனி கொஞ்சம் இடம் கொடுத்திருந்தால் சச்சின் இன்னொரு 20-25 ஓட்டங்களை எடுத்திருக்கலாம் என நினைக்கிறேன்

சச்சினின் பேட்டிங் சாதனைகளும் முரளியின் பந்து வீச்சு சாதனைகளும் நீண்ட காலத்திற்கு அழியாமலிருக்கும் என நினைக்கிறேன். 

ஐ.பி.எல் பணத்திருவிழா தொடங்க போகிறது. லலித் மோடி என்ற பண முதலைக்கு அடுத்த மாதம் நல்ல இலாபம் கொழிக்க போகிறது. ஐ.பி.எல்லின் மறுபக்கம் பற்றிய ஒரு பதிவு அடுத்த வாரம் போடலாமென நினைத்திருக்கிறேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


சிலி நாட்டில் ஏற்பட்டிருந்த நிலநடுக்கத்தின் பயங்கரங்களை தொலைக்காட்சியில் பார்த்த போது 2012 படம் நினைவுக்கு வந்தது, இனியும் மனிதன் இயற்கையை எதிர்த்து தொழிற்படுவானாயின் எதிர்காலத்தில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி வரும். 


----------------------------------------------------------------------r--------------------------------------------------------------------------------------------
இலங்கை முன்னனி பதிவர்களின் பதிவுகள் சமீப காலமாக குறைந்து விட்டன, காரணம் என்னவென்று தெரியவில்லை. முக்கியமாக நம்ம வந்தியத்தேவனின் பதிவுகள் குறைந்தது எம்மை போன்று பின்னூட்ட கும்மியாளர்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. 

சந்தேகம் 1  - இனி மேல் வந்தி இலங்கை பதிவரா அல்லது இங்கிலாந்து பதிவரா? அவரை எப்படி அழைப்பது?

சந்தேகம் 2 - இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ?


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஓரு கட்டிடம் சரிந்து கிடக்கும் காட்சி





கற்றதும் பெற்றதும் - நான் வியந்த சுஜாதா

தமிழில் பலரை நான் வாசித்திருந்தாலும் சுஜாதா என்னும் எழுத்தாளரளவுக்கு யாரையும் ரசித்திருக்கவில்லை, காரணம் அந்த எழுத்துகள் என்னை என்னுள் ஏற்படுத்திய இரசாயண மாற்றங்கள். அந்த அற்புத எழுத்தாளர் எழுதிய கதைகளை வாசித்த என்னுள் இன்னும் கணேஷ், வசந்த், ஜீனோ, மெக்சிகோ சலவைக்காரி என்னும் கதாபாத்திரங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எனக்கு மட்டுமல்ல என்னை போன்ற பலருக்கு இவ்வாறுதான் என நினைக்கிறேன். நம்மை விட்டு சுஜாதா பிரிந்து சனிக்கிழமையுடன் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன

இவர் கதை, நாடகம், திரைப்படம், கட்டுரை என பல விடயங்களை தொட்டு சென்றிருந்தாலும், அதில் எதிலுமே குறைவைக்காமல் வாசகனை திருப்திபடுத்தியிருக்கிறார். தமிழில் விஞ்ஞான உலகை புனைத்து கதை எழுதும் திறமை இவர் அளவுக்கு யாரிடமும் இருக்கவில்லை என்றே கூறலாம். 

80களின் பிற்பகுதியில் இவர் எழுதிய ஒரு கட்டுரையில் “எதிர் காலத்தில் கையில் தூக்கி கொண்டு செல்ல கூடிய தொலைபேசி கண்டுபிடிக்கப்படும், அது  கண்டுபிடிக்கப்பட்ட பின் மனிதனின் ப்ரைவசி இல்லாமல் போய்விடும்” என கூறியிருந்தார். இவ்வாறு எதிர் காலத்தில் விஞ்ஞானவுலகில் நடக்க கூடிய விடயங்களை எதிர்வுகூறுவதில் இவருக்கு நிகர் இவரே.

இவரது கதைகளை வாசித்த பலருக்கு மெக்சிகன் சலவைக்காரி ஜோக் என்பது பிரபலமாகவிருக்கும், ஆனாலும் இதுவரை யாருக்குமே இந்த ஜோக் என்னவென்று தெரியாது, கணேஷ் வசந்த் என்னும் பாத்திரங்களை தனது கதைகளில் பயன்படுத்தி அவர்களை பிரபல்யமாக்கிய இவரது கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. சங்கர், மணிரத்தினம் எனும் பிரபல இயக்குனர்களின் வலது கரமாக இருந்த சுஜாதாவின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு பெரிய அடியாக அமைந்தது என்றால் மிகையில்லை. தமிழ் திரைப்பட வரலாற்றில் மிகப் பெரிய சினிமாவாக அமையவிருக்கும் எந்திரன் படம் சுஜாதாவின் கதை என்று கூறப்படுகிறது, அப்படி அமைந்தால் மகிழ்ச்சியே.. 

ஆனாலும் தமிழ் சினிமா சுஜாதா என்னும் மாபெரும் எழுத்தாளனுக்கு செய்யக் கூடிய உதவி என்னவென்றால் அவரது கதைகளை படமாக்குகிறேன் என ஆனந்த தாண்டவம் போன்ற படங்களை வெளியிட்டு அந்த எழுத்துகளை கொலை செய்யாமலிருப்பதேயாகும். தயவு செய்து அந்த எழுத்துக்களை எழுத்துக்களாகவே வாழ விடுங்கள், படமாக்குகிறேன் என சுஜாதாவின் எழுத்துகளை அசிங்கப்படுத்தாதீர்கள். அவரது கதைகளை படமாக்கியதில் விக்ரம் எனக்கு பிடித்த படம், ஆனந்த தாண்டவம் திரைப்படம் பிடிக்காமல் போனதற்கு பிரிவோம் சந்திப்போம் நாவல் ஏற்படு்த்திய அனுபவத்தை திரைப்படம் தராமல் போனதாயிருக்கலாம்.

சுஜாதா என்னும் ரங்கராஜன் எழுதிய கணையாளியின் கடைசிப்பக்கங்கள், கற்றதும் பெற்றதும் போன்ற கட்டுரை தொகுப்புக்கள் வாசிக்க வாசிக்க இனிமையானவை, இளமையானவை, குறும்பானவை. கற்றதும் பெற்றதும் தொடர் நின்ற பின்னர் ஆனந்த விகடனை வாசிப்பதை நிறுத்தி விட்டேன். ஆனால் இன்றும் நேரம் கிடைதால் பழைய ஆனந்த விகடன் சஞ்சிகை எடுத்து கற்றதும் பெற்றதும் வாசிப்பேன், எத்தனை முறை வாசித்தாலும் புதிய அனுபவத்தை தரக்கூடிய வல்லமையை அக்கட்டுரைகள் கொண்டிருக்கின்றன.

இவரும் பிரபல இந்திய விஞ்ஞானி அப்துல் கலாமும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கண்டு பிடித்தவர் சுஜாதாவாகும்.

சுஜாதா இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருந்தால் இன்னும் பல விடயங்களை எழுதியிருப்பார், நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.. 

சுஜாதா என்னும் எழுத்தாளரின் எழுத்துக்களில் நான் கற்றதும் பெற்றதும் ரொம்ப அதிகம்...