Showing posts with label மாற்றுக் கருத்து. Show all posts
Showing posts with label மாற்றுக் கருத்து. Show all posts

மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிப்போம்

எங்களில் அனேகமானோர் (சில நேரங்களில் நானும் தான்) மாற்றுக்கருத்துகளை விரும்புவதில்லை. “நாம் கூறியது தான் சரி”, “என்னுடைய நிலைப்பாடு தான் சரி” என்கிற நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம். மாற்றுக்கருத்து கொண்டவர்களை மாற்றானாகவே பார்த்து பழகிவிட்டோம்.

இப்படி மாற்றானாக பார்த்து பார்த்து அவர்களது சகல கருத்துக்கள், நிலைப்பாடுகள் அனைத்தையும் எதிர்க்க தொடங்கி விடுகிறோம். இது விரும்பதகாததாகும். இதையே நம் முன்னோர்கள் “வேண்டாத மருமகள் கைபட்டால் தப்பு, கால் பட்டாலும் தப்பு” என்றார்கள்.

எதிரியிடமும் நல்ல விடயங்களை எடுத்து கொள்ளாலாம் தவறில்லை, ஆனால் நாங்களோ எதிர்கருத்துள்ளவர்களை எதிரிகளாக உருவகப்படுத்திக் கொண்டு அவர்கள் எது செய்தாலும் பிழையே என வாதிடுகிறோம். நான் என்னை பொறுத்த வரையில் அடுத்தவர் கருத்துகளை அதிகமாக மதிப்பவன். சில நேரங்களில் அவை எனக்கு பிழையாக தெரிந்தாலும் நான் அவற்றை ஏற்றுக் கொள்வேன் காரணம் எனக்கு பிழையாக தெரிந்த விடயம் அந்த அன்பருக்கு சரியாக தெரியும். இறுதியில் நான் சம்பந்தப்பட்ட விடயத்தில் எனது கருத்தை அவருக்கு தெரிவித்து விடுவேன்.

ஆனால் சிலர் எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான் என்கிற நிலையை விட்டு வரமாட்டார்கள். எதிலுமே நமது கருத்தை தவிர்ந்து இன்னொரு கருத்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சுருங்க கூறின் வாழ்த்துவதையே சரியான விமர்சனமாக கொள்வார்கள்.

 உதாரணமாக நான் சிறு வயது தொடக்கம் ஏ.ஆர். ரகுமானின் தீவிர ரசிகன். இதனால் இப்போதும் இளையராஜா பாடலை விரும்புபவர்கள். எல்லாரும் என்னை இளையராஜா பாடல்களின் எதிரியாகவே பார்க்கிறார்கள். எனக்கு இளையராஜா பாடல்களும் பிடிக்கும். அதை விட இசைப்புயல் பாடல்கள் பிடிக்கும். இவ் இரண்டுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். காரணம் இங்கு “கமல் ரசிகன் என்றால் அவன் ரஜனி படத்துக்கு எதிரி”, “விஜய் படம் பார்க்கிறவன் அஜித் படத்துக்கு எதிரி” என்கிற ரீதியில் தான் இருக்கிறார்கள். (இந்த விடயத்தை கூற சினிமா தேவையா என நீங்கள் கேட்கலாம் என்ன செய்ய தமிழர்களின் சகல விடயங்களும் சினிமாவை வைத்தே எடை போடப்படுகின்ற நிலையில்தான் நாங்கள் இருக்கின்றோம். நேற்று விஜய் டீவியில் பாபாஜி குகைக்கு போவதை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட “நடந்தது என்ன?” நிகழ்ச்சியையும் “சூப்பர் ஸ்டார் சென்ற குகை” என்றே விளம்பரப்படுத்தினர்). எனக்கு ரஜனியும் பிடிக்கும் கமலும் பிடிக்கும், விஜய்யும் பிடிக்கும்

அவரவர்களுக்கென்று சொந்த கருத்து, சொந்த எண்ணங்கள் உண்டு. அவரவர்க்கென்று சுயமாக எதையும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என மா(ற்)றுவோம். எதிர்கருத்துடையவன் எல்லாம் எதிரியல்ல, நம்மை போல சிந்திப்பவன் எல்லாம் நண்பனுமல்ல என நம்மையும் சுற்றி உள்ளவரையும் மா(ற்)றுவோம்.

இந்த பதிவு சம்பந்தமாக மாற்றுக்கருத்துககள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.