Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

ஆதவன் - பதிவர் பார்வையில்

பார்க்க வேண்டும் என நினைத்திருந்து ஆதவன் படம் பார்த்துவிட்டேன். பதிவர்கள் எல்லாரும் விமர்சனம் எழுதியிருப்பதால் நான் விமர்சனம் எழுதாமல் நிறை குறைகளை எழுதுகிறேன்.

நிறைகள்

நகைச்சுவை திலகம் வடிவேல் கதாநாயகனாக நடித்து இந்திரலோகத்தில் நா அழகப்பனுக்கு அடுத்து வெளிவந்திருக்கும் படம் ஆதவன். சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு (ப்ரெண்ஸ் படத்துக்கு பிறகு என நினைக்கிறேன்) இரண்டாம் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கிறது. வடிவேலு கதாநாயகனாக நடித்த படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி ஸ்ரேயா வாய்ப்பிழந்து போன வரலாறு அறிந்தும் இந்த படத்தில் சூர்யா இரண்டாம் கதாநாயகனாக நடித்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.

குருவி படத்தில் விஜய் பாய்வதை பதிவர்கள் கிண்டலடித்த கோபத்தால் சூர்யா படம் முழுக்க பாய்கிறார், பாய்கிறார் வாழ்வின் எல்லை வரை பாய்கிறார். இப்படி ஒருவர் பறக்கும் காட்சியில் ரிஸ்க் எடுத்து நடிப்பது முடியாத காரியம்.  கடைசிகாட்சியில் (எங்களுக்கு) கொட்டாவி வந்தாலும் பறந்தே வெற்றியும் பெறுகிறார். சூர்யா பறக்கும் ரகசியத்தை விஜயகாந்திடமிருந்து கற்றிருக்கிறார்.

பின்னணி இசையில் ணொய் ணொய் என மிரட்டியிருக்கும் ஹாரீஸ் அழகிய தமிழ் வார்த்தைகான ஹசலி பிசிலி, தேக்கோ போன்ற வரிகளை கொண்ட பாடல்களை தந்து படத்தின் வெற்றியில் உதவியிருக்கிறார். (ஏற்கனவே கேட்ட மாதிரி இருந்தால் அதற்கு அவர் பொறுப்பல்ல)

படத்தில் இறுதியில் புதுசா இரண்டு பேர் வாராங்க அவங்க வாரது படத்தோட கதைபோக்குக்கு ரொம்ப முக்கிய விடயமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. (அவங்க இரண்டு பேரும் அடுத்த படத்தில டைரக்டர் கம் ஹீரோ, தயாரிப்பாளர் கம் ஹீரோ வாக மாற இங்கே முன்னோட்டம் பார்த்திருக்கிறார்களோ?)

படத்தில் அடுத்தடுத்து வரும் விடயங்களை நாங்களே ஊகிக்க கூடியவாறு கதை எழுதிய ரமேஷ் கண்ணாவும் பாராட்டுக்குறியவரே

குறைகள் 

முன்னைய படங்களான பில்லா. வில்லு போன்றல்லாது நயன்தாரா படம் முழுக்க போர்த்தி கொண்டு வருவது ரசிகர்களை கோபம் கொள்ள வந்துள்ளது.

படத்திற்கு சீரியசாக வருபவர்களையும் வடிவேலு சிரிக்க வைத்துவிட்டார் என்பதும் ஒரு குறையே.

இது போதும் இதுக்கு மேல என்னால முடியல.....


ஒரு காமன்மேனின் பார்வையில் உன்னைப் போல் ஒருவன்.

கமல் என்னும் மபெரும் கலைஞனின் நடிப்பை பார்த்து வியந்திருக்கும் நான் கமலின் தீவிர விசிறியல்ல, எனினும் கமல் படம் பிடிக்கும். அன்பே சிவம் என்னும் படத்தை கிட்டதட்ட 10,15 தடவை பார்த்திருப்பேன். வாழ்வே மாயம், மூன்றாம் பிறை பார்த்து காதல் என்றால் என்ன என தெரியா வயதில் அழுதிருக்கிறேன். அந்த வயதில் வேறு எந்த நடிகராலும் என்னை அழ வைக்கவில்லை என தான் கூற வேண்டும். 


எப்போதும் போல் கூட்டத்தில் முண்டியடித்து கமல் படம் பார்க்க பிடிக்காமல், காரணம் தியேட்டரில் கமல் ரசிகர்கள் விசிலடித்து, சத்தம் போட்டு படத்தை ரசிக்க இயலாமல் செய்து விடுவார்கள் (ஏனெனில் தசாவதாரம் முதல் முறை பார்க்கும் போது காட்சி மட்டுமே விளங்கியது) ஒரு வாரம் தாண்டி தான் கூட்டம் கொஞ்சம் குறைய படம் பார்க்க போனேன். எல்லாரும் உன்னைப்போல் ஒருவன் படத்தை விமர்சித்து இருப்பதால் நான் அதை விமர்சிக்க வில்லை எனக்கு படத்தில் தெரிந்த ப்ளஸ், மைனசை பற்றி தான் கூற போகிறேன்.


ப்ளஸ்
* ஒன்றரை மணித்தியாலங்களில் படம் முடிகிறது. ஆனால் படம் இப்போதான் தொடங்கியது என்ற உணர்வு கடைசி வரை இருக்கிறது.. படு வேகத்தோடு போகும் திரைக்கதை.
* வழமையான கமலின் அநாயாசமான நடிப்பு. சும்மா இருந்த இடத்திலிருந்தே தொலைபேசியில் கதைத்து கொண்டு அதற்கேற்ப முகபாவனைகளை மாற்றிக் கொள்ளும் கமலுக்கே உரிய தனிப்பட்ட நடிப்பு.
* கமல் என்னும் மாபெரும் ஆளுமையை மீறி வெளித்தெரிந்த மோகன்லாலின் நடிப்பு. ஓரிரண்டு சந்தர்ப்பங்களை தவிருத்து வழமையாக கமலின் படத்தில் கமலை மீறி யாரும் வெளியே தெரிய மாட்டார்கள். இதற்கு நல்ல உதாரணம் தெனாலியில் ரகுமானின் இசை மற்ற படங்களவில் பேசப்படாமை. மோகன்லால் செம ஸ்மார்ட், இந்த போலீஸ் பாத்திரத்தை இதை விட சிறப்பாக யாரும் செய்திருக்க முடியாது. 
* ஆரிப் என்னும் பாத்திரத்தில் நடித்தவரின் பாடிலெங்குவேஜ் மற்றும் மிடுக்கான நடிப்பு. 
* படத்தின் பின்னணி இசை அதிபிரமாதம் என்று பல கமல் ரசிகர்களால் விளிக்கப்பட்டமையை நான் ஆதரிக்கவில்லை எனினும் படத்தோடு எங்களை ஒன்றிப்போக வைத்த ஓரு முக்கியமான காரணிகளில் இசையும் ஒன்று. 
* படத்தின் தொகுப்பு மிக அருமை படத்துக்கு தேவையானவற்றை மட்டும் வெளி கொணர்ந்திருந்து.
* ஆங்கில பட தரத்திற்கு வேகமான திரைக்கதை படங்கள் நமது மொழியில் வர இது ஒரு ஆரம்பமாக இருக்கலாம் (எனது சொந்த ஆசை).


மைனஸ்
* தீவிரவாதம் என்றால் இஸ்லாமியர்கள்தான் என்னும் நிலைப்பாட்டை படம் முழுக்க வெளிக்காட்டிய வசனங்கள். என்னுடன் படம் பார்த்த முஸ்லிம் நண்பர்களுக்கு இது முகசசுளிப்பை ஏற்படுத்தியது உண்மை. விஜயகாந்த் படங்களில் வந்த பாகிஸ்தான்/முஸ்லிம் தீவிரவாதிகளை நான் கமல் என்னும் சிந்தனா சக்தி கொண்ட கலைஞனிடம் எதிர்பார்க்கவில்லை.
* காமன்மேன் என்ற பாத்திரத்தில் நடித்த கமலின் நுனி நாக்கு ஆங்கிலம் அவரை ஒரு Upper Class மனிதனாகவே தெரிகிறது.
* சொந்தக்கருத்துகளை படத்தில் கமல் திணித்திருப்பது. வாக்காளர் பெயர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்னும் அவரது ஆதங்கத்தை படத்தில் காட்டியிருப்பதானது கமலுக்கே ஒரு கரும்புள்ளிதான், வசூல்ராஜாவில் ”ஆள்வார்பேட்டை ஆளுடா” தசாவதாரத்தில் ”உலக நாயகனே” போன்ற பாடல்களை போலவே இவற்றை கமல் தனது படத்துக்குள் திணித்து கொள்வதாக பட்டாலும் இந்த படத்தில் இந்த வசனம் அந்நியமாகவே படுகிறது. சிம்பு, தனுஷ் அளவிற்கு தனக்கு ஏற்பட்ட சொந்த பிரச்சினையை படத்தில் காட்டுவதை கமலிடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
* படத்தின் இறுதியில் முடிவு எங்களால் ஊகிக்க முடிந்தது என்பது கடைசி கட்டத்தில் ஒரு வேகத்தடையே
* தீவிரவாதத்திற்கு முடிவு தீவிர வாதமே என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.




மொத்தத்தில் சில சில குறைகள் இருந்தாலும் உன்னைப்போல் ஒருவன் எம்போன்று ஒருவனே.


UPO is not an Ordinary Film but also not an Extraordinary Film,  ஆனால் ஆங்கில தரத்தில் ஒரு தமிழ் படம்


கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வாரமாக எழுதிய பதிவு..